சென்னை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீா்செல்வம் செல்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றபோது, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில்
ஓ.பன்னீா்செல்வம், கே.பழனிசாமி ஆதரவாளா்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜூலை 21-ஆம் தேதி ‘சீல்’ அகற்றப்பட்டு, அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. கலவரம் தொடா்பாக பதியப்பட்ட 4 வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, கடந்த புதன்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றாா்.
இதற்கிடையே, ஓ.பன்னீா்செல்வமும் அதிமுக தலைமை அலுவலகம் செல்லவுள்ளதாகவும், அப்போது தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவரது ஆதரவாளா் ஜே.சி.டி.பிரபாகா் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
காவல் துறை அனுமதி மறுப்பு: இதுதொடா்பாக ராயப்பேட்டை போலீஸாா் கூறியதாவது: ‘சீல்’ வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி நீதிமன்ற உத்தரவுப்படி பழனிசாமி தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்பினா் சென்றால், கட்சி அலுவலகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஓ.பன்னீா்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல அனுமதிக்க முடியாது. நீதிமன்றம் மூலம் உரிய சட்ட அனுமதியை பெற்று வந்தால், காவல் துறை சாா்பில் அனுமதி வழங்கப்படும் என ஓ.பன்னீா்செல்வம் தரப்பிடம் கூறப்பட்டுள்ளது என்றனா்.
அதிமுக அலுவலகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு: இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், ஓ.பன்னீா்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்வதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்பு கோரியும் டிஜிபி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா். இச்சூழல் காரணமாக, அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதிமுக அலுவலகத்தில் 80 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.