செம்மண் கடத்தியதாக ஊராட்சி மன்ற தலைவர் கைது!
கிருஷ்ணகிரி: செம்மண் கடத்தியதாக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் துறையினர், கொண்டப்பநாயனப்பள்ளி கிராமம் அருகே, ஆவல்நத்தம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி செய்தபோது, லாரியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதன் ஓட்டுநர் ஜிங்களூர் கிராமத்தை சேர்ந்த சர்தார் பாஷா (36), என்பது தெரியவந்தது.
தொடர்ந்து ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த குற்றச் சம்பவத்தில் சின்ன மனவராணப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பாதுஷா(54)-க்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து டிப்பர் லாரி ஓட்டுநர் சர்தார் பாஷா, ஊராட்சி மன்ற தலைவர் பாதுஷா ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து கிருஷ்ணகிரி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.
இதையும் படிக்க: புகழ்பெற்ற வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா
கைது செய்யப்பட்ட பாதுஷா வேப்பனப்பள்ளி அதிமுக சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.