மேட்டூர் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருவதை அடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புதன்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55 கனஅடியாக அதிகரித்தது.
வியாழக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | பண்ணவாடி பரிசல் துறை மூடல்... பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் அவதி
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும், உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது.