சீர்காழியில் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய குற்றவாளி, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் ராஜஸ்தானில் பதுங்கி இருந்த நிலையில், காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி (51). ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த 15 ஆண்டுகளாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறார். மேலும் இவர் பூம்புகார் தருமகுளம் பகுதியில் நகை அடகுக் கடை மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு, தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நேஹல் ஆகிய இருவரையும் கட்டி போட்டுவிட்டு வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகை மற்றும் ரூ. 6.75 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தன்ராஜ் சவுத்ரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரினை திருடி தப்பிச் சென்றனர்.
இதனிடையே சீர்காழி அருகே எருக்கூர்சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்த ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளை, கொலையில் ஈடுபட்ட மனீஷ், ரமேஷ் பட்டேல், மஹிபால் சிங் ஆகிய மூவரையும் மயிலாடுதுறை மாவட்ட அப்போதைய எஸ்பி ஸ்ரீநாதா தலைமையில் கொண்ட போலீசார் பிடிக்க சென்றனர்.
அப்பொழுது அதிரடிப்படை வீரர் சாலிம் என்பவரை கொள்ளையர்கள் தாக்கினார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஹோலி கிராமத்தைச் சேர்ந்த மகிபால் சிங் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அங்கு மறைந்திருந்த ராஜஸ்தான் ஜோத்பூரை சேர்ந்த மணிஷ், ராஜஸ்தான் மாநிலம் கங்காவாஸ் பகுதியில் சேர்ந்த ரமேஷ் பட்டேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து கொலை கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிஷ், ரமேஷ் பட்டேல் மற்றும் இதில் தொடர்புடைய கும்பகோணம் கருணாராம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் மணிஷ் தலைமறைவாக ராஜஸ்தானில் இருந்தார். அவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், தீரன் பட பாணியில் ராஜஸ்தான் மாநிலம் விரைந்து சென்றனர்.
அங்கு சில தினங்கள் தங்கியிருந்து மணிஷ் குறித்த தகவல்களை அம்மாநில போலீசாரின் உதவியுடன் திரட்டி, பின்னர் மணிஷ் கைது செய்து விமான மூலம் இன்று அதிகாலை சென்னை கொண்டு வந்து, பின்னர் சீர்காழி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.