திருச்சி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில், 2-வது குற்றவாளியான ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை கொண்டார்.
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி லில்லி (வயது 32). இவர் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், ஆசிரியர் மோகன்தாஸ் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் ஆசிரியர் மோகன்தாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த வழக்கில் ஆசிரியை லில்லி 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் ஆசிரியை லில்லி கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், மண்ணச்சநல்லூர் சீத்தாலஷ்மி நகரிலுள்ள தனது தாய் வீட்டுக்கு ஆசிரியை லில்லி நேற்று முன்தினம் சென்றுள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் பெரியசாமி, முசிறி கல்வி மாவட்ட அலுவலர் பாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தனது மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குணசேகரன் கூறினார். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, லில்லியின் உடலை பெற்றுக்கொண்ட அவரது உறவினர்கள் துறையூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்தனர்.