திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பிரம்மோற்சவம், இந்தாண்டு வெகு விமரிசையாக நடத்த உள்ளது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. பல லட்சம் டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்துக்குப் பயன்படுத்தப்படும் தர்ப்பைப் பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலை திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை அதிகாரி ஏ.சீனிவாசலு தலைமையில் தேவஸ்தான வனத்துறை அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக ஏழுமலையான் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டன.
பிரம்மோற்சவ நாள்களில் தினந்தோறும் வீதியுலா வரும் மலையப்பசுவாமி தினமும் ஒவ்வொரு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி கண்கொள்ளக் காட்சியாகும்.
பிரம்மோற்சவ விழாவின் போது லட்சக் கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்பதால் கார், வேன் உள்ளிட்ட 12 ஆயிரம் வாகனங்கள் மட்டும் திருமலைக்கு அனுமதிக்க உள்ளது.
மேலும், பிரம்மோற்சவத்தின் போது மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனமும், விஐபி தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் முன்னெச்சரிக்கையாக 10 லட்சம் லட்டுக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.