விருதுநகர் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 4 சிறார்களிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை கூர்நோக்கு இல்லத்தில்வைத்து பள்ளி மாணவர்கள் 4 பேரிடமும் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவை சேர்ந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி எஸ்பி முத்தரசி தலைமையில் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.
ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் 4 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் கடந்த திங்கள் கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், நான்கு பேரையும் ஏழு நாள்கள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள 4 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை நடத்தினர். அதனைத் தொடர்ந்து தற்போது 4 சிறார்களிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக மண்டபம் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த 2 மாணவர்கள் உள்பட 4 சிறுவர்களும் மதுரை அழைத்துவரப்பட்டுள்ளனர்.