சென்னை: சென்னையில் கடந்த ஒரு சில நாள்களாக கரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி 99 பேர் சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
ஒரு சில எண்ணிக்கைகளே அதிகரித்தாலும் பொதுவிடங்களுக்குச் செல்லும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றே கூறப்படுகிறது.
சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் கரோனா பாதிப்பு இல்லை.
இதையும் படிக்க.. 'சரணடைய மாட்டோம்': மரியுபோல் எஃகு ஆலையில் கடும் போர்
தண்டையார்பேட்டை, இராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூரில் ஒற்றை இலக்கத்திலேயே பாதிப்பு உள்ளது. தேனாம்பேட்டை (29) மற்றும் அடையாறு (13) மண்டலங்களில் மட்டும் கரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் உள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மெல்ல குறையத் தொடங்கிய கரோனா பாதிப்பானது, ஏப்ரல் 11 முதல் ஏறுமுகத்தக்கு மாறியுள்ளது. இது அதிகப்படியான பாதிப்பாக இல்லாவிட்டாலும், நாள்தோறும் மெல்ல அதிகரித்து வருவதால் சென்னை மக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றே கருதப்படுகிறது.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம்
17 ஏப்ரல்: 19
16 ஏப்ரல்: 12
15 ஏப்ரல்: 12
14 ஏப்ரல்: 08
13 ஏப்ரல்: 10
12 ஏப்ரல்: 09
11 ஏப்ரல்: 10
தமிழகத்தின் நிலவரம் என்ன?
தமிழகத்தில் நேற்று மாலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டது. அதில், நேற்று புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 34,53,263-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,007-ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 14,477 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 231 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.