கொடநாடு எஸ்டேட் தனக்கு கோயில் போன்றது எனவும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் இரண்டு நாள்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றும், இன்றும் நடைபெற்று வரும் விசாரணையில் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார்.
இதையும் படிக்க | கொடநாடு வழக்கு: சசிகலாவிடம் 2-வது நாளாக விசாரணை
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவல்துறையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சசிகலா கொடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம் என்றும், ஆனால் தன்னைப் பொருத்தவரை ஒரு கோயில் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மதுரையில் விஷவாயு தாக்கி இறந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி
இந்த வழக்கில் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தங்களது உயிரை இழந்தவர்களின் மரணத்திற்கு நீதி கிடைத்திட வேண்டும் எனவும் சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.