மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 51,000 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக நிரம்பிய நிலையில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று காலை வினாடிக்கு 51,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் வெள்ள நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணையில் உள்ள சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 27,000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120.11 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 51,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 50,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.64 டி.எம்.சியாக உள்ளது.
நேற்று இரவு மேட்டூரில் கனமழை பெய்தது, மழை அளவு 80.60 மி.மீயாக பதிவாகியுள்ளது.