முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதிப்பேரணி தொடங்கியது.
அண்ணா சாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது.
இதற்காக, அண்ணா சாலை, வாலாஜா சாலை போன்றவற்றில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணாநிதி நினைவு நாளையொட்டி நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் திமுக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி அண்ணா சாலையிலுள்ள கருணாநிதி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா சாலை முதல் மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடைபெறுகிறது.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி. கனிமொழி, உள்ளிட்டோருடன் மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு. எ.வ.வேலு, மெய்யநாதன் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து கருணாநிதி இல்லமான கோபாலபுரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லவுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயம் செல்லவுள்ளதாகவும் தெரிகிறது. இன்று நண்பகல் வரை திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.