போதைப் பொருள் விற்றால் சொத்துகள் முடக்கம்: முதல்வர் ஸ்டாலின்
போதைப் பொருள்கள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் விழிப்புணர்வு தினம் நாளை கடைபிடிக்கவுள்ள நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தலைமை உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்படுத்துவோர் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை மருந்துகள் நம் மாநிலத்திற்குள் வருவதை நாம் தடுக்க வேண்டும்.
போதை என்பது அதை பயன்படுத்தும் தனிநபர் பிரச்னை இல்லை, சமூகப் பிரச்னை. தமிழகத்தில் போதைப் பொருள்கள் நுழைவதை முழு ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.
போதைப் பொருள்கள் தான் மத, சாதி மோதல்களை தூண்டுதலாக அமைந்துவிடுகிறது. போதைப் பொருள்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடக்க காரணமாக இருக்கிறது.
இதையும் படிக்க | காமன்வெல்த் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் பவானி தேவி!
போதையின் பாதையில் செல்லும் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்.
தங்கள் குழந்தைகள் போதைப் பொருள்கள் பயன்படுத்துகிறார்களா என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு, போதைப் பொருள் போன்ற எதிர்மறை விஷயங்களிலும் வளர்ந்து விடக் கூடாது." எனத் தெரிவித்தார்.