கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இன்று ஜாமினில் வெளிவந்தனர்.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும், தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையிலும், இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன் ஆகிய இருவரும் சேலம் மத்திய சிறையில் இருந்தும், பள்ளி செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய மூவரும் பெண்கள் தனிக் கிளை சிறையிலும் இருந்து இன்று ஜாமினில் வெளிவந்தனர்.
முன்னதாக இந்த வழக்கில், மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து ஜிப்மர் மருத்துவக் குழு நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது.
ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையின்படி, மாணவி ஸ்ரீமதியின் முதல் உடல் கூறாய்வுக்கும், இரண்டாவது உடல் கூறாய்வுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. மாணவி பாலியல் பலாத்காரமோ, கொலையோ செய்யப்படவில்லை என்று நீதிபதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.