
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதிவியேற்றார்.
அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து ஆளுநருக்கும், முதல்வருக்கும் அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் மலர்கொத்து வழங்கினார்.
இந்த நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தமிழக அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைச் செயலாளர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன்மூலம் தமிழக அமைச்சா்களின் எண்ணிக்கை 35-ஆக அதிகரித்துள்ளது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதிவேந்தனை தொடர்ந்து 45 வயதுக்கு குறைவான அமைச்சர் என்ற வரிசையில் உதயநிதியும் இடம்பெற்றுள்ளார்.
தொடர்ந்து தலைமைச் செயலகம் செல்லும் உதயநிதி ஸ்டாலின், தனது அறையில் பொறுப்பேற்கவுள்ளார்.
உதயநிதிக்கு இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டு, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகிய துறைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிது நேரத்தில் அரசுத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.