முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் 3ஆவது வழக்கில் கைது

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மூன்றாவது வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மூன்றாவது வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவர், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலை அண்மையில் சந்தித்து ஒரு புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவை எனது சகோதரர் நவீன்குமார் திருமணம் செய்துள்ளார். நான், மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலையை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் நடத்தி வந்தேன். அந்த தொழிற்சாலை எனது பெயரில் உள்ளது. என்னுடன் நவீனும் சேர்ந்து தொழில் செய்து வந்தார். எங்களுக்குள் தொழிற்சாலையை நடத்துவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. 
இதை பயன்படுத்தி ஜெயக்குமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி கடந்த 2014-ஆம் ஆண்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்து, எனது தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்தார். மேலும் தொழிற்சாலை பூட்டி, அபகரித்துக் கொண்டார். நான் பல முறை எனது தொழிற்சாலையை திறக்க முயன்றும் ஜெயக்குமார், நவீன், ஜெயப்பிரியா தரப்பு எனக்கு அச்சுறுத்தல் கொடுத்தும், தகராறு செய்தும் வருகின்றனர். அந்த தொழிற்சாலையின் மதிப்பு ரூ.5 கோடியாகும். இச் சம்பவத்துக்கு பின்னர் ஜெயக்குமார், தனது மருமகனான எனது சகோதரர் நவீனுக்கு கும்மிடிப்பூண்டியில் ஒரு மீன் வலை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து கொடுத்துள்ளார். இந்த தொழிற்சாலையை ஜெயக்குமார் தனது மனைவி ஜெயக்குமாரி,மகள் ஜெயப்பிரியா ஆகியோர் பெயரில் வைத்துள்ளார். 
ஆனால் எனது தொழிற்சாலை திறக்க விடாமல் ஜெயக்குமார் தரப்பு மிரட்டி வருகிறது. இதனால் எனது தொழிலை முழுவதுமாக ஜெயக்குமார் நசுக்கியுள்ளார். எனது சொத்தை அபகரித்து,கொலை மிரட்டல் விடுத்து தொழிலையும் சீரழித்த ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

6 பிரிவுகளில் வழக்கு: அந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மத்தியக் குற்றப்பிரிவுக்கு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த புகார் மனு குறித்து காவல்துறை விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவீன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் புகார் குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. 
இதையடுத்து மகேஷ் அளித்த புகார் மனு குறித்து மத்தியக் குற்றப்பிரிவினர் விசாரணை செய்தனர். விசாரணையில் ஜெயக்குமார் தரப்பு மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மத்தியக் குற்றப் பிரிவினர் ஜெயக்குமார்,ஜெயப்பிரியா, நவீன் ஆகிய 3 பேர் மீது கொலை மிரட்டல்,அத்துமீறி நுழைதல், குற்றம் செய்ய தூண்டுதல், குற்றச் சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
மீண்டும் கைது: ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தலின்போது திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயக்குமாரிடம், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான வாரண்டை வழங்கினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஜெயப்பிரியா,நவீனை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக நிர்வாகி நரேஷை தாக்கியது, சாலை மறியலில் ஈடுபட்டது என இரு வழக்குகளை முறையே தண்டையார்பேட்டை, ராயபுரம் போலீஸார் ஜெயக்குமார் மீது பதிவு செய்து, கடந்த 21-ஆம் தேதி கைது செய்தனர். 
இந்நிலையில் தற்போது மூன்றாவதாகவும் ஜெயக்குமார் மீது ஒரு வழக்கைப் பதிவு செய்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com