நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: அமைச்சர்கள் தரிசனம்

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: அமைச்சர்கள் தரிசனம்


நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆஞ்சனேயரை தரிசிக்க வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் சர்வ அமாவாசை தினத்தில் இக்கோயிலில் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.

அதன்படி நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சனேய ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 எண்ணிக்கையிலான வடைமாலை சாத்தப்பட்டு சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்தனர். இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், எம்எல்ஏ பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நண்பகல் 12 மணியளவில் வடைமாலை அகற்றப்பட்டு, பின்னர் நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றாலான சிறப்பு அபிஷேகம், சொர்ணாபிஷேகமும் நடைபெற இருக்கிறது. பிற்பகல் 2 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்ற உள்ளன. 

ஆஞ்சநேயரை தரிசிக்க இணைய வழியில் பதிவு செய்த 200 பேர், இலவச தரிசன முறையில் 300 பேர் என 500 பக்தர்கள் வீதம் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுவாமிக்கு சாத்தப்பட்ட வடைகள் பொட்டலமிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்ட உள்ளன. 

நாமக்கல் மட்டுமின்றி, சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது. கோயில் பகுதி முழுவதற்கும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com