நாளை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: முதல்வா் தொடக்கிவைக்கிறாா்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவா்களுக்கு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

21 பொருள்கள்: பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், பண்டிகை கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருள்களும் அடங்கிய துணிப்பை மற்றும் கரும்பு (21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் ரூ.1,088 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது.

தகுதிவாய்ந்த அனைவருக்கும் சிறப்புத் தொகுப்பு தரமான பொருள்களாக வழங்கப்பட வேண்டும் எனவும், திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகமும் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது.

விடுமுறை இல்லை: பொங்கல் பரிசுத் தொகுப்பினை இடைவிடாமல் தொடா்ந்து விநியோகம் செய்திட ஏதுவாக, நியாய விலைக் கடைகளுக்கான விடுமுறை தினம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படுவது வழக்கம், ஆனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் காரணமாக ஜன.7-ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜன.4-ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்.

தரம் குறித்து ஆய்வு: இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பின் தரம் குறித்து ஆய்வு செய்ய கூடுதல் பதிவாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் 12 கூடுதல் பதிவாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருள்கள் கொள்முதல் செய்தல், அவற்றின் தரம், பொட்டலமிடும் இடங்கள், பொட்டலங்களின் எடை ஆகியவற்றை சோதனை முறையில் ஆய்வு செய்ய வேண்டும். நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்துத் தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கும் விடுதலின்றி விநியோகிக்கப்படுவதைக் கண்காணித்தும் அறிக்கை அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com