சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது, அதிமுக உறுப்பினர்கள் ஆளுநரை உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. தமிழகத்துக்குள் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கவில்லை. அம்மா மினி கிளினிக்குகளை மூடியதன் மூலம் ஏழை மக்கள் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதை காட்டியுள்ளது.
விசாரணை என்ற பெயரில் அதிமுகவினரை அழைத்துச் சென்று அழைக்கழித்து, பொய் வழக்குகள் போடும் போக்கு நிலவுகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே, நீர்நிலைகளை தூர்வாரியிருந்தால் மழையின் போது தண்ணீர் தேங்காமல் செய்திருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் பெயருக்காக அம்மா மினி கிளிக்கை திறந்துவிட்டு, அவை இயங்கி வந்த கட்டடத்துக்கு வாடகைக் கூட கொடுக்கவில்லை அதிமுக அரசு. மினி கிளினிக் தொடக்க விழாவின் போது ஒரு அமைச்சர் பலூன்களை உடைத்தார். அதுபோலத்தான் அந்த திட்டமும்.
தமிழகத்தில் குட்கா என்ற பொருளை பிரபலப்படுத்தியதே அதிமுக அரசுதான்.
தேர்தலுக்காகத்தான் அதிமுக ஆட்சியில் நியாயவிலைக் கடைகளில் பணம் தந்ததுடன் முறைகேடாக நகைக்கடன் தந்துள்ளனர் என்று தங்கம் தென்னரசு கூறினார்.