'யானை தன் குட்டியை பழக்குவது போல..' ஈரோடு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு

ஈரோட்டில் ந;டைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்.
'யானை தன் குட்டியை பழக்குவது போல..' ஈரோடு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு (கோப்புப்படம்)
'யானை தன் குட்டியை பழக்குவது போல..' ஈரோடு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேச்சு (கோப்புப்படம்)

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரையில், 

ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும் - புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் - பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய நிகழ்ச்சியையும் இணைத்து இந்தக் காணொலிக் காட்சி மூலமாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்கான முழு ஏற்பாட்டை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்திருக்கக்கூடிய வீட்டுவசதி, நகர்ப்புற அமைச்சர் முத்துசாமி சிறப்பாக இந்தப் பணியை நிறைவேற்றியிருக்கிறார். 

இந்த நேரத்தில், இன்னொன்று சொல்ல விரும்புவது, இன்னும் சில வாரங்களில் இந்த நோய்த் தொற்று குறையும் நேரத்தில், அதை கட்டுப்படுத்துகிற சூழல் அமைந்த பிறகு, நிச்சயமாக நான் ஈரோட்டுக்கு வருவேன், ஈரோட்டு மக்களை நான் நேரடியாக வந்து சந்திப்பேன்.

ஈரோடு என்பது திராவிட இயக்கத்தின் தாய் வீடு. தந்தை பெரியார் பிறந்த ஊர். பேரறிஞர் அண்ணா வாழ்ந்த ஊர். கருணாநிதியின் குருகுலம் என்பதும் ஈரோடுதான். அதனால், எங்கள் மனதில் குடியிருக்கும் ஊராகத்தான் ஈரோட்டை நாங்கள் எப்போதும் மதித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோட்டில், கழக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நடக்கின்ற முதல் விழாவில் இந்த காணொலிக் காட்சியின் மூலமாக கலந்துகொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

மொத்தம் 66 பணிகள் ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்று, இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவை மொத்தம் 104 கோடி ரூபாய் மதிப்பிலானவை ஆகும். அதேபோல 45 கோடி ரூபாய் மதிப்பிலான 365 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டிருக்கிறது.

* இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மலைவாழ் மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் கத்திரிப்பட்டி வன எல்லை முதல் ஈசலங்காடு வரையிலான சாலையைத்தான் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

* தாளவாடி வட்டாரம் பையணாபுரம் ஊராட்சியில் ஒரு கோடியே 29 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 தடுப்பணைகள் கட்டும் பணிக்கும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.

* பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 40 ஆயிரத்து 95 பயனாளிகளுக்கு ரூ.2,0976.71 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறோம்.

கரோனா காலம் என்பதால்தான், எல்லோரையும் ஒரே இடத்தில் அழைத்துவந்து இந்த நிகழ்ச்சியை நாம் நடத்த முடியவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பயனாளிகள் இருந்து, இந்த நலத்திட்ட உதவிகளை அவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மூலமாக பெற இருக்கிறார்கள்.

அனைவருக்கும் முறையாக – சரியாக அந்த உதவிகள் சென்றடைந்ததா என்று அதிகாரிகள் கடைசி வரை இருந்து கண்காணிக்க வேண்டும், அதில் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

* பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஏற்கனவே 550 எண்ணிக்கையில் படுக்கைகள் இருந்தன. இதனை அதிகரிக்க எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக, ரோட்டரி சங்கத்தின் மூலம் 401 படுக்கைகளும், ‘ஒளிரும் ஈரோடு’தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு 180 படுக்கைகளும், குளைஉயட மூலம் 80 படுக்கைகளும், ஏற்கனவே உள்ள கட்டிடத்தில் கூடுதலாக 100 படுக்கைகளும் உருவாக்கப்பட்டு, தற்பொழுது 1,311 எண்ணிக்கையில் பிரமாண்டமான இந்த மருத்துவமனை அமைந்துள்ளது என்பதைநான் அறிவிக்க விரும்புகிறேன்.

அதேபோல் - பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோவிட் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. 401 படுக்கைகளுடன் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 நாட்களில் இது உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதற்குத் துணை நின்ற ஈரோடு மாவட்ட ரோட்டரி சங்கங்கள் அனைத்தையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

கரோனா நோயளிகளுக்கு என்று ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் ஏராளமான நிதி உதவியைச் செய்திருக்கிறார்கள். அவர்களோடு அமைதிப்பூங்கா அறக்கட்டளை, கொங்கு கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும் உதவி செய்திருக்கிறது.
* மருத்துவமனை வளாகம்
* மருந்துகள் சேமிப்பு வளாகம்
* மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை அனைத்தும் உருவாக்கித் தந்துள்ள பெருந்தன்மையை நான் அரசின் சார்பில் அவர்களை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஈரோடு மாநகராட்சி 2008 முதல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

2011 முதல் விரிவடைந்த மாநகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது. 109.52 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இம்மாநகராட்சி மக்களுடைய வசதிக்காக மாபெரும் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை இக்கூட்டத்தின் வாயிலாகத் தெரிவிக்க நான் பெருமை அடைகிறேன்.

இந்தத் திட்ட அறிக்கையில், பெருந்துறையில் ஒரு பேருந்து நிலையமும், ஈரோடு புறநகர்ப் பகுதிகளில் இரண்டு பேருந்து நிலையங்கள் என்று மூன்று பேருந்து நிலையங்கள் அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

சோலார் பகுதியில் ஒரு புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கையில் இருக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருச்சி, கரூர், பழனி, வெள்ளக்கோவில் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

சத்தி சாலையில் மற்றொரு பேருந்து நிலையம் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து சத்தி, கோவை, திருப்பூர், ஊட்டி மார்க்கம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.

அடுத்து இன்னொரு முக்கியமான அறிவிப்பையும் இந்த நிகழ்ச்சியில் வெளியிட நான் விரும்புகிறேன்.

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியானது 1954-இல் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இக்கல்லூரியில் இளநிலைப் பட்ட வகுப்பு பதினொன்றும், முதுநிலைப் பட்ட வகுப்பு மூன்றும் இருக்கிறது. 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்தக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்தக் கல்லூரியானது, அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் 1998-ஆம் ஆண்டு முதல் கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அவர்களைப் பாதுகாவலராகக் கொண்டு, இப்போது செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்கக் கோரி ஏறக்குறைய கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதை நிறைவேற்றக்கூடிய வகையில், இந்தக் கல்லூரியை, அரசுக் கல்லூரியாக இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

இப்படி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் - புதிய திட்டங்களை தொடங்கி வைத்தல் - முடிந்த திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் ஆகிய விழாக்களைத் தொடர்ந்து இந்த அரசு நடத்திக் கொண்டு வருகிறது.

இதுவரை நான் நேரடியாக கலந்துகொண்டு, 714 கோடி ரூபாய் மதிப்பிலான 185 அரசு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்திருப்பது மட்டுமல்லாமல், 339 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 190 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 லட்சத்து 18 ஆயிரத்து 835 பயனாளிகளுக்கு 3 ஆயிரத்து 642 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறேன்.

கடந்த 5-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஆளுநர் உரையாற்றினார். அப்போது, பொறுப்பேற்ற நொடியில் இருந்து நான் மக்கள் பணியாற்றி வருவதாக ஆளுநர்  பாராட்டினார். அப்படித்தான் கருணாநிதி எங்களையெல்லாம் பழக்கி வைத்திருக்கிறார். தன்னை, பெரியார் எப்படி பழக்கினார் என்றும் கருணாநிதி எங்களிடத்தில் அடிக்கடி சொல்வார். யானை தன்னுடைய குட்டியை எப்படிப் பழக்குமோ, அப்படி பெரியார் எங்களை மக்கள் தொண்டாற்றப் பழக்கினார் என்று கருணாநிதி அடிக்கடி சொல்வார். அதைப் போலத்தான் கருணாநிதி எங்களைப் பழக்கினார் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com