பிறந்த நாளில் கோவிந்தராஜனை மறந்த சீர்காழி

மறைந்த  பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் பிறந்த நாளை (ஜன.19) சீர்காழி பகுதியில் கொண்டாட மறந்தது இசை ஆர்வலர்களிடையே வருத்தத்தை  ஏற்படுத்தியது.
சீர்காழி கோவிந்தராஜன் (கோப்புப் படம்)
சீர்காழி கோவிந்தராஜன் (கோப்புப் படம்)

சீர்காழி: மறைந்த  பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் பிறந்த நாளை (ஜன.19) சீர்காழி பகுதியில் கொண்டாட மறந்தது இசை ஆர்வலர்களிடையே வருத்தத்தை  ஏற்படுத்தியது.

சீர்காழி என்ற ஊர் பெயரைக்கேட்டதும் திருஞானசம்பந்தர் பெருமானின் ஞானப்பால் வரலாறுதான் ஆன்மிக அன்பர்களுக்கு ஞாபகத்துக்கு வரும். அதன்பின்னர் சீர்காழி தமிழிசை மூவர்கள் புகழ் தமிழார்வலர்களால் கொண்டாடி பரப்பபட்டு அனைவரது மனதிலும் நீங்காது இடம்பிடித்துள்ளது. அதேபோல் 1953ஆம் ஆண்டுக்கு பிறகு சீர்காழி என்றாலே சீர்காழி கோவிந்தராஜன் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு  தனது வெண்கல குரலால் அனைவரையும் ஈர்த்தவர் இசைமணி கோவிந்தராஜன்.

இவர் சீர்காழியில் கடந்த1933-ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி சிவசிதம்பரம் -அவயம்பாள் தம்பதிக்கு மகனாகப்பிறந்தார். கோவிந்தராஜனுக்கு சிறு வயதிலேயே இசைமீது இருந்த ஆர்வத்தை அறிந்த அவரது  ந்தை,இசைப்பள்ளியில் சேர்த்துப்படிக்கவைத்தார். பின்னர் நாடகக் குழுவில் சேர்ந்து பாடத்தொடங்கினார். அப்போது சினிமா என்ற பத்திரிகையை நடத்திவந்த பி.எஸ். செட்டியார், சீர்காழி கோவிந்தராஜனை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த கோவிந்தராஜன், இசைமேதை ஜி.ராமநாதனால் இசையின் பக்கம் திருப்பபட்டார்.பின்னர்  1953-ஆம் ஆண்டு பொன்வயல் என்ற திரைப்படத்துக்காக ’ சிரிப்புதான் வருகுதய்யா’ என்ற பாடலை பாடினார். ஆனால் அதற்கு முன்னரே ஒளவையார் படத்துக்காக ஆத்திசூடியைப் பாடினார். பின்னர், பல்வேறு  திரைப்படங்களில் அவர் பாடிய பாடல், தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி, அவருக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

வினாயகர், முருகர் உள்ளிட்ட தெய்வங்கள் மீது சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ஏராளமான பாடல்கள் ஆன்மிக அன்பகர்களை பக்திப்பரவசத்தில் ஆழ்த்தியது.

இசைமணி, இசை பேரறிஞர் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்று சீர்காழி கோவிந்தராஜன் கடந்த 1988-ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். சீர்காழியின் பெயரை இந்தியா முழுவதும் தனது வெண்கலக் குரலால் அறியவைத்த சீர்காழி கோவிந்தராஜனின் பிறந்த நாளான ஜன.19-ம் ஆம் தேதி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சீர்காழியில் எவ்வித நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

சமூக வலைதளமான வாட்ஸ்அப் குரூப்புகளில் மட்டும் சிலர் கோவிந்தராஜனின் நினைவுகளை பரப்பியதோடு முடித்துக்கொண்டனர். இது இசை ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. வரும் காலத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் பிறந்தநாள், நினைவுநாளில் அவரது திருவுருவபடங்களை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்துவதோடு அவர் நினைவை போற்றும் வகையில் சீர்காழி கோவிந்தராஜனுக்கு நினைவு மண்டபம் அமைக்க ஒன்றிணைந்து தமிழக அரசை வலியுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com