மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளா் சகாயமேரியை கைது செய்தனா்.
ஆனால், விடுதிக் காப்பாளா் உள்ளிட்டோா் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டாா் என பெற்றோா் புகாா் எழுப்பினா். இதுதொடா்பாக சிபிசிஐடி காவல் பிரிவினா் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் தந்தை முருகானந்தம் மனுத் தாக்கல் செய்தாா்.
இந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.