அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக பொது குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார்.

அதன்படி, இன்று மதியம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில், நீதிபதிகள் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் இருக்கிறது, காலாவதியாகவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் கொடுக்க முடியும் என்றும், அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என்று கட்சி விதி கூறுகிறது. எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள் பதவியில் நீடிக்கிறார்கள். 2665 பொதுக் குழு உறுப்பினர்களில் 2190 பேர் பொதுக்குழுவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 82 சதவீதம் பேர் ஒப்புதல் அளித்திருப்பதால், பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மிக நீண்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவர்களது வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டதாவது, அதிமுக கட்சியைப் பொறுத்தவரை தலைவர்கள் உயிருடன் இல்லாத போதுதான் பதவி காலி என்ற நிலை உருவாகும். அப்படி ஒரு நிலை 1987 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் இறந்த போது என்ன நடந்தது என்பது குறித்த விளக்கம் பதில் மனுவில் இல்லை. எனவே இரு பதவிகளும் காலியாக உள்ளதாக வைக்கப்பட்ட வாதங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல

அதிமுக கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவையில்லை. அது ஒரு நடைமுறை அவ்வளவே.  பொதுக் குழுவில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படாத நிலையில் எப்படி பதவிகள் காலியாகும்? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பொதுக் குழுவில் ஒப்புதல் அளிக்காததால் இரு பதவிகளும் காலி என எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததற்கு ஓ. பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com