அதிமுக பொதுக்குழு நடக்குமா? எடப்பாடி பழனிசாமி பதில் மனுவால் பரபரப்பு

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
அதிமுக பொதுக்குழு நடக்குமா? எடப்பாடி பழனிசாமி பதில் மனுவால் பரபரப்பு
அதிமுக பொதுக்குழு நடக்குமா? எடப்பாடி பழனிசாமி பதில் மனுவால் பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.

அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது முதல் கூறி வந்த நிலையில், நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என்று கட்சி விதி கூறுகிறது. எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள் பதவியில் நீடிக்கிறார்கள். 2665 பொதுக் குழு உறுப்பினர்களில் 2190 பேர் பொதுக்குழுவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 82 சதவீதம் பேர் ஒப்புதல் அளித்திருப்பதால், பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களாவன, கடந்த பொதுக் குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் வழங்கப்படவில்லை. பொதுக்குழுவுக்குத் தடை விதிக்கக் கோரி பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேணடும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பொது குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு தொடா்பாக எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஜூலை 8) விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் இருக்கிறது, காலாவதியாகவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் கொடுக்க முடியும் என்றும், அதிமகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இருப்பதால் பொதுக்குழு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com