ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை: ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான இபிஎஸ் பதில் மனு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கில், நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமான வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு: பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இபிஎஸ் தரப்பில் பதில்
அதிமுக பொதுக்குழு: பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இபிஎஸ் தரப்பில் பதில்

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கில், நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமான வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொது குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனு தொடா்பாக எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை (ஜூலை 8) விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி இன்னும் இருக்கிறது, காலாவதியாகவில்லை என்றும், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் கொடுக்க முடியும் என்றும், அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என்று கட்சி விதி கூறுகிறது. எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள் பதவியில் நீடிக்கிறார்கள். 2665 பொதுக் குழு உறுப்பினர்களில் 2190 பேர் பொதுக்குழுவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 82 சதவீதம் பேர் ஒப்புதல் அளித்திருப்பதால், பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும்  கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கும் சில விஷயங்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக இருப்பதால் பொதுக்குழு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், ‘பொதுக் குழுவை நடத்தத் தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், பொதுக் குழுவை சட்டப்படி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், உயா் நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டாா்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, உச்சநீதிமன்றம் பொதுக் குழுவை நடத்தலாம் என்று உத்தரவிட்டிருக்கிற நிலையில், உயா் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினாா்.

இதைத் தொடா்ந்து, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று, ஜூன் 23-ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பான செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று மனுதாரா் மனுவைத் தாக்கல் செய்த நாள் வரை, பொதுக் குழு தொடா்பான அறிவிப்பு வெளியிட்டு 13 நாள்கள் முடிவடைந்துள்ளது. எனவே, கூட்டம் தொடா்பாக நோட்டீஸ் கொடுக்கவில்லை என கருதக் கூடாது. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கூடாது’ என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக் குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக் கழக நிா்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாள்களுக்கு முன் பொதுக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்? பொதுக் குழுவுக்கான அழைப்பிதழில் யாா் கையெழுத்திடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினாா்.

இதுதொடா்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வெள்ளிக்கிழமை மதியத்துக்கு ஒத்திவைத்திருந்தார். இதையடுத்து இன்று மதியம் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கி காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com