சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வரும் நிலையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்றிருந்த ஓ. பன்னீர்செல்வம் அங்கிருந்து வெளியேறினார்.
கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்க கோட்டாட்சியர் வந்த நிலையில், அலுவலகத்திலிருந்து வெளியறிய ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு, தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை காவலர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்து வருகின்றனர்.
இதையும் படிக்க.. அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்தானது
அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பங்கேற்க வானகரம் சென்றார். அதே வேளையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குச் சென்றார் ஓ. பன்னீர்செல்வம்.
இதையும் படிக்க.. போர்க்களம் போல் காட்சியளிக்கும் அதிமுக தலைமை அலுவலகம் (விடியோ)
பூட்டியிருந்த கதவை கடப்பாறை உள்ளிட்ட கருவிகளால் உடைத்துத் தள்ளிக் கொண்டு ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து, அலுவலகத்தைக் கைப்பற்றினர்.
இதனால் அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் மோதல் வெடித்தது. தலைமை அலுவலகமே போர்க்களம் போல காணப்பட்டது.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் வன்முறை வெடித்தது குறித்து செய்தி அறிந்த கோட்டாட்சியர், காவல்துறையினருடன் வந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தார். முன்னதாக, அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.