சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடி எடப்பாடி பழனிசாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்திருக்கும் நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் போர்க்களம் போல காட்சியளிக்கிறது.
அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடைபெறும் அதே வேளையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் தடையை மீறி உள்ளே நுழைந்த ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க.. அதிமுக பொதுச் செயலாளர் பதவி குறித்த விதி ஒட்டுமொத்தமாக ரத்தானது
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, அங்கிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர்.
ஒருவரை ஒருவர் கற்களாலும், இருக்கைகளை தூக்கி எரிந்தும் தாக்கிக் கொண்டனர். எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ. பன்னீர்செல்வத்தின் படங்களையும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் படங்களையும் எடுத்து வந்து உடைத்தனர்.
ராயப்பேட்டை அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்களும் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் அடையாளம் தெரியாத அளவுக்கு பிளாஸ்டிக் இருக்கைகள் அடித்து தூள் தூளாக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கம் பேனர்கள் கிழித்து சேதப்படுத்தப்பட்டிருப்பதையும், பலரும் கைகளில் கிடைத்த பொருள்களை எல்லாம் தூக்கிக் கொண்டு எதிர்தரப்பினரைத் தாக்க ஓடுவதையும், சற்று தொலைவில் நின்று கொண்டு கற்களை எறிந்து ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொள்ளும் காட்சிகளும் கிடைத்துள்ளன.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் இருந்த எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கிழித்தனர்.
முன்னெச்சரிக்கையாக, தலைமை அலுவலகத்தில் குவிக்கப்பட்டிருந்த காவலர்கள், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து விலக்கக் கடும் முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.