மதுரை: மதுரை விமான நிலையத்தில் தவறுதலாக துப்பாக்கியை இயக்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சேவை என நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இயங்கி வருகின்றன. இங்கு பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை ஆயுதக் கட்டடத்தில் ஆய்வாளர் துருவ்குமார் ராய் இரவுப் பணி முடித்துவிட்டு 9 எம்எம் தோட்டா வகை துப்பாக்கியை ஒப்படைக்கும் போது துப்பாக்கி எதிர்பாரதவிதமாக சுடத் தொடங்கியது. திடீரென நிலையத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
ஆயுதங்கள் பாதுகாப்பு அறையில் இச்சம்பவம் நடைபெற்றதால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தவறுதலாக துப்பாக்கியை கையாண்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து சென்னையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.