சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இரு தரப்பினரும் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு பழனிசாமி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகே விசாரணைக்கு ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி, எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு பிரச்னை காரணமாக அதிமுக அலுவலகத்தை வருவாய்த் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி, ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முறையீடு செய்யப்பட்டது. அதில், ‘உண்மையான அதிமுக நாங்கள்தான். கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுதொடா்பாக மனு தாக்கல் செய்தால் புதன்கிழமை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமாா் தெரிவித்தாா். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி ஓ.பன்னீா்செல்வம் தரப்பிலும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமாா், இதுதொடா்பாக புதன்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்தாா்.
இன்று இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க தலைமை நீதிபதி அனுமதி அளித்ததையடுத்து விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.