எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய கடிதம் பரிசீலனையில் உள்ளதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு,
'அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதம் நேற்று முன்தினம் எங்களுக்குக் கிடைத்தது. அவரது கடிதம் பரிசீலனையில் உள்ளது. ஓபிஎஸ் கடிதம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஓபிஎஸ் கடிதத்தைத் தவிர, வேறு எந்த கடிதமும் வரவில்லை' என்று தெரிவித்தார்.
பின்னர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது குறித்து பதில் அளித்த அவர்,
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது மத்திய உள்துறைக்கோ, குடியரசுத் தலைவருக்கோ மத்திய அமைச்சரவைக்கோ அனுப்ப வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், தமிழக ஆளுநர் அதை செய்ய மறுக்கிறார். இதன்மூலமாக அவர் தமிழக மக்களைத் தான் புறக்கணிக்கிறார்.
நீட் மசோதாவை அனுப்பிவிட்டதாகக் கூறுகிறார்கள். அது உள்துறைக்கு சென்று சேர்ந்ததா எனத் தெரியவில்லை' என்றார்.
இதையும் படிக்க | பேரவை செயலகத்துக்கு ஓபிஎஸ் கடிதம்