மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளை இரவு நிரம்பும்?

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளை இரவு நிரம்பும்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  82,642 கன அடியாக அதிகரித்துள்ளதால் நாளை சனிக்கிழமை இரவு மேட்டூர் அணையை நிரம்பும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
Published on



கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  82,642 கன அடியாக அதிகரித்துள்ளதால் நாளை சனிக்கிழமை இரவு மேட்டூர் அணையை நிரம்பும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கர்நாடகம் மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரளம் மாநிலம் வயநாட்டிலும் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1.5 லட்சம் கன அடி வரை உபரி நீர் காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது. 

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால்  காவிரியின் இரு கரைகளிலும் தாழ்வா பகுதிகளில் வசிக்கும்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கர்நாடக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். 

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 73,029 கன அடியாக சரிந்த வந்த நீர் வரத்து இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 82,642 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அனைத்து வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை மேட்டூர் அணை நீர்மட்டம் 113.96 அடியாக உயர்ந்துள்ளது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 84.16 டி.எம்.சியாக உள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் நாளை இரவு மேட்டூர் அணையை நிரம்பும் வாய்ப்பு உள்ளது.

கடந்த வாரத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்த நிலையில் பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் நடப்பு நீர் பாசன ஆண்டில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் என்று காவேரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டூர் நீர் தேக்கத்தில் மீன்வளம் பெருகும் என்று மேட்டூர் அணை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு திடீரென அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாலும் மேட்டூர் அணையில் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com