கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புத் துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையில் பருவமழை காலங்களில் அணையின் உறுதித்தன்மை, நீர் வரத்து, உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் ஆய்வு நடத்துவர், அவர்களுக்கு துணையாக மத்திய கண்காணிப்பு துணைக் குழுவும் ஆய்வு நடத்தும்.
அதன்பேரில் மத்திய நீர் வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில், தமிழக தரப்பு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், உதவி செயற் பொறியாளர் எம்.குமார், கேரள அரசு தரப்பில் கட்டப்பனை நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அணைப் பகுதிக்குச் சென்றனர்.
பிரதான அணை, பேபி அணை, நீர் கசியும் சீப்பேஜ் வாட்டர் அளவு, நீர் வழிப்போக்கிகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
ஆய்வுகள் முடிந்த பிறகு குமுளி 1 ஆம் மைல் என்ற இடத்தில் உள்ள மத்திய கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆய்வுகள் நடத்தியது பற்றி ஆலோசனை நடத்தினர்.