நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள பெரியார் உருவச்சிலை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சரக்கு வாகனம் மோதியதில் திடீரென சேதமடைந்தது. இதனையடுத்து அங்கிருந்தோர் தார்ப்பாய்க் கொண்டு அச்சிலையை மூடினர்.
நாமக்கல் நகரப் பகுதியில் நேதாஜி சிலைக்கு எதிரில், பல ஆண்டுகளுக்கு முன் அதிமுக சார்பில் சிறிய வடிவிலான பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் வைக்கப்பட்டன. அந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில் அதிமுகவினர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6 மணியளவில் பெரியார் சிலை மட்டும் திடீரென சேதமடைந்தது. சரக்கு வாகனம் ஒன்றின் ஓட்டுநர் வாகனத்தை பின்னால் எடுத்தபோது சிலை சேதமாகி விட்டதாக கூறப்படுகிறது. அந்த சரக்கு வாகனம் அங்கிருந்து சென்று விட்டது.
பெரியார் சிலை சேதமடைந்ததும் அங்கிருந்தோர் உடனடியாக நெகிழி தார்ப்பாய்க் கொண்டு சிலையை மூடினர்.
இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். வாகனம் மோதி சிலை சேதமானதா? அல்லது வேண்டுமென்றே யாரேனும் சேதப்படுத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.