பெரம்பலூர் அருகே வெள்ளிக்கிழமை கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி ஊராட்சிக்குள்பட்ட கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன் மகன் முருகேசன். இவருக்குச் சொந்தமான கல் குவாரியில் கூலித் தொழிலாளியாக சுப்பிரமணியும் (40), லாரி ஓட்டுநராக ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமாரும் (36) பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கல்குவாரியில் மேற்கண்ட இருவரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பாறை சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு உயிரிழந்தார்.
தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிகழ்விடத்துக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடப்பிரியா மற்றும் காவல் கண்காணிப்பாளர் எஸ். மணி ஆகியோர் பார்வையிட்டு, கல்குவாரிக்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பொதுமக்கள் சாலை மறியல்
தகவலறிந்த ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, உயிரிழந்த செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கக் கோரியும், சம்பந்தப்பட்ட கல் குவாரியை மூட வலியுறுத்தியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெரம்பலூர் போலீசார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.