சேலம் மாவட்டம் மேட்டூர் வனப்பகுதியில் அமைந்துள்ள ஒசோடப்பன் சுவாமி கோவிலில் கிடா விருந்து வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேட்டூர் வனசரகத்திற்கு உட்பட்ட பெரியதண்டா வனப்பகுதியில் உள்ளது ஒசோடப்பன் சுவாமி கோவில். பழமையான இந்த கோவில் மாரி மடுவு பகுதியில் தமிழக கர்நாடக எல்லையில் இருந்தது. வீரப்பபெயர் பொறித்த பெரிய வெண்கல மணியும் இங்கு வீரப்பனால் வைக்கப்பட்டுள்ளது.
அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் யானைகள் நிறைந்த பகுதி என்பதாலும் அந்த ஆலயத்திற்குச் செல்ல வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் இந்தப் பகுதியில் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் அடிக்கடி வந்து செல்வதால் அதிரடி படையினர் திருவிழா நடத்த அப்போது அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து பெரிய தண்ட வனப்பகுதியில் சுவாமி சிலை வைத்து பொதுமக்கள் வழிபடத் துவங்கினார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத் திருவிழா நடைபெறும். கரோனா காலமென்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரு விழா நடத்தப்படவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக இந்த ஆலய திருவிழா நடைபெற்றது. கொளத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றனர். நூற்றுக்கணக்கான ஆடுகளை பலியிட்டு பொங்கல் வைத்து பக்தர்களுக்கு கிடா விருந்து வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் விருந்து உண்டனர்.