ராமேசுவரம்: தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் திங்கள்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில் மீன்களின் இனபெருக்க காலமாக கருதப்படும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாள்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்காலம் செவ்வாய்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
இதனைத்தொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் 1,750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தடை காலத்தின் போது படகுகளை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
தற்போது தடைக்காலம் செவ்வாய்கிழமை நிறைவடைய உள்ள நிலையில் அந்தந்த துறைமுகங்களில் இருந்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர்.
ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 700 க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்ல உள்ள நிலையில், மீன்பிடிக்க செல்ல சீரமைப்பு பணிக்காக கரையில் ஏற்றப்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் இறக்கி வருகின்றனர்.
மேலும், மீன்பிடிக்க செல்வதற்கு தேவையாக டீசல், வலைகள், உணவுப்பொருட்கள்,மற்றும் ஐஸ் கட்டிகள் வாங்கி படகுகளுக்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கோடியக்காடு குழகர் கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்