
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் வருகிற ஜூன் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து அதுகுறித்து ஆலோசிக்க கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைமை நிா்வாகிகள், மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் சென்னை நடைபெற்றது.
இதையடுத்து கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் தேவை என்று மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அதிமுகவிற்கு 'ஒற்றைத் தலைமை' குறித்த விவாதம் சூடுபிடித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். செம்மலை, வைகைச் செல்வன், வளர்மதி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஓபிஎஸ் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் 3-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை சேலம் சென்றுள்ளார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
இதையும் படிக்க | ஒற்றைத் தலைமை: ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை