கடந்த இரண்டு நாள்களாக பெய்த கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியிருப்பதால் பாதுகாப்புக் கருதி அதிலிருந்து நீர்திறக்கப்படவிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர்திறக்கப்படுவதை முன்னிட்டு கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக ,கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.
இதையும் படிக்க.. தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போதைய நீர்மட்டம் உயரம் 24 அடியில், 23.36 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், 3,475 மில்லியன் கன அடியாகவும், நேற்று முன்தினம் இரவு பெய்த மழை மற்றும் கிருஷ்ணா நதி நீர் காரணமாக வினாடிக்கு 1700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏரி முழு கொள்ளளவை எட்டியிருப்பதால், உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே, ஏரிக் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரியின் நீர் மட்ட உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொது பணித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.