பொதுக்குழுவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர் செல்வம் மனு அளித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை வானகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்
தலைமை தீர்மானம் நிறைவேற்ற உறுப்பினர்கள் கடிதம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'சட்டவிரோதமாக ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு கட்சி தலைமை பதவியை மாற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு தலைமையிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆதரவாளர்களான கே.சி.வீரமணி, பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன், தங்கமணி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.