கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 4 ஆவது அலை மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கோவையில் கடந்த வாரம் 10க்கும் குறைவாக இருந்த தினசரி கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தற்போது 50 ஐ கடந்துள்ளது.
எனவே, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும், கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும் மாவட்ட சுகாதாரத் துறைக்கு சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று ஆட்சியர் சமீரன் இன்று தெரிவித்துள்ளார். மேலும் கரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.