ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு கட்டித்தர முன்வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் இந்திய கட்டுமானச் சங்கத்தின் 3 நாள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அப்போது முதல்வருக்கு வெள்ளியினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் முக்கியமானது கட்டுமானத்துறையினர். நாட்டை கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுடன் கட்டுமானத் துறை கரம் கோர்த்து செயல்படுகிறது.
வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் உறுதுணையாக இருப்பது கட்டுமானத் துறை. சென்னை கட்டுமானச் சங்கம் மட்டுமே 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்குவதாக அறிகிறேன். கருணாநிதி முதல்வராக இருந்தபோது கட்டுமானச் சங்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். கட்டுமானச் சங்க விழா மேடையிலேயே சிமென்ட் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டவர் கருணாநிதி.
நான் முதல்வராக பதவியேற்ற பின்பும் கட்டுமானத் துறையினருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா கால பாதிப்பில் இருந்து கட்டுமானத் துறை முழுமையாக மீளவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகளை கட்டித்தர முன்வர வேண்டும். அரசின் கட்டடங்களை தரமானதாக கட்டிக்கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.