தஞ்சாவூர்: முனைவர் ம. நடராசன் நினைவு நாளையொட்டி தஞ்சாவூரிலுள்ள அவரது நினைவிடத்தில் வி.கே. சசிகலா ஞாயிற்றுக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினார்.
புதிய பார்வை இதழ் ஆசிரியர் ம. நடராசன் 2018 ஆம் ஆண்டு காலமானார். இவரது 4-ஆம் ஆண்டு நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையும் படிக்க | கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயில் வருஷாபிஷேகம்
தஞ்சாவூர் விளார் சாலையிலுள்ள ம. நடராசன் நினைவிடத்தில் இவரது மனைவியும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான வி.கே. சசிகலா ஞாயிற்றுக்கிழமை காலை அஞ்சலி செலுத்தினார். அப்போது, கோ பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து சசிகலாவை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ. ராஜா, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா ஆர். தொண்டைமான், நடிகை சி.ஆர். சரஸ்வதி உள்பட ஏராளமானோர் சந்தித்துப் பேசி, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஏற்கெனவே மார்ச் 17-ஆம் தேதி இரவு தஞ்சாவூருக்கு வந்த சசிகலா பரிசுத்தம் நகரிலுள்ள இல்லத்தில் தங்கியுள்ளார். கும்பகோணத்தில் உள்ள கோயில்களுக்கு சசிகலா திங்கள்கிழமை சென்று வழிபடவுள்ளார்.