சென்னை: நடிகர் சிலம்பரசன் கார் மோதி முதியவர் பலியான வழக்கில், ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை தேனாம்பேட்டை, இளங்கோ தெருவில் கடந்த 18-ஆம் தேதி சாலையை கடக்க முயன்ற ஒரு முதியவர் மீது அந்த வழியாக சென்ற கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அந்த முதியவரை, அந்தப் பகுதி மக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர், உயிரிழந்தார்.
இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த முதியவர் தியாகராயர் நகர், டாக்டர் தாமஸ் ரோடு பகுதியை சேர்ந்த முனுசாமி (70) என்பது தெரியவந்தது.
மேலும், முதியவர் மீது மோதிய கார் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த கார் பிரபல திரைப்பட நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமானது என்பதும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் நடிகர் டி. ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்றபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து விபத்து நிகழ்ந்தபோது காரை ஓட்டி சென்ற தேனாம்பேட்டை தாமஸ் சாலைப் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் செல்வம் (29) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.