ரமலான் பண்டிகையையொட்டி பாகிஸ்தான், வங்கதேச ராணுவ வீரர்களுடன் இந்திய வீரர்கள் செவ்வாய்கிழமை இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.
நாட்டின் பல்வேறு பகுதி எல்லைகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானையொட்டிய இந்தியாவின் மேற்குப் பகுதியில் 3,323 கிலோமீட்டர் தூரத்திற்கும், வங்கதேசத்தையொட்டிய இந்தியாவின் கிழக்குப் பகுதியில் 4,096 கிலோமீட்டர் தூரத்திற்கும் முக்கிய இடங்களில் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ரமலான் பண்டிகையையொட்டி பாகிஸ்தான் வங்கதேச எல்லை வீரர்களுடன் இந்திய ராணுவ வீரர்கள் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். அதேபோன்று இந்திய வீரர்களுக்கும் அவர்கள் இனிப்புகளை பரிசாக அளித்தனர்.
சர்வதேச எல்லையான வாகா எல்லை உள்பட, சாம்பா, கதுவா, ஆர்.எஸ்.புரா, அக்நூர் ஆகிய எல்லைப் பகுதிகளிலும் ராணுவ வீரர்கள் ரமலான் பண்டிகையையொட்டி இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர்.
எல்லைகளில் இருதரப்புகளிடையே இணக்கமான மற்றும் அமைதியான சூழல் ஏற்பட இதுபோன்ற நிகழ்வுகள் பெரிதும் துணைபுரிவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.