நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அருகே லட்சுமி விலாஸ் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் இந்த ஏடிஎம் மையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரம் உள்ள பகுதியில் மிளகாய் பொடியை தூவிவிட்டுச் சென்றுள்ள மர்ம நபர்கள்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு ஏடிஎம் மையத்துக்குள் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இயந்திரத்தின் பணம் வைக்கும் பகுதியை உடைத்து ரூ. 5 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் போலீஸார் தங்களை பிடிக்காத வகையில் சினிமா பட பாணியில் மிளகாய் பொடியை ஏடிஎம் இயந்திரம் உள்ள பகுதியில் தூவிவிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.