சென்னை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், நாட்டையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சீர்குலைப்பதாகவும், அதுவொரு ஆபத்தான இயக்கம் என குற்றம்சாட்டினார்.
மனித உரிமை, அரசியல்-மாணவர் இயக்கம் என பல முகமூடிகளை அணிந்து நாட்டில் செயல்பட்டு வருகிறது.
பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக செயல்பட்டு வருவதாகவும், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியாவில் தாக்குதலில் ஈடுபட ஆள் அனுப்புகிறது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.
இதனை சில கட்சிகள் ஆதரிப்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது. அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே. பயங்கரவாதத்தில் ஈடுபட்டால் அதற்கான பதிலடியை அவர்கள் பெறுவார்கள் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.
2006 -இல் நேசனல் டெவலப்மெண்ட் பிரண்ட் என்ற அமைப்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பாக மாறியது. பின்னர் தமிழகத்தில் மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் கர்நாடக கண்ணிய மன்றம், கோவாவில் குடிமக்கள் மன்றம், ராஜாஸ்தானில் கல்வி மற்றும் சமுதாயச் சமூகம், மேற்கு வங்கத்தில் நகரிக் அதிகர் சுரக்ஷா சமீதி, மணிப்பூரில் லிலிங் சமூகக் மன்றம், ஆந்திரத்தில் சமூக நீதிக் கழகம் போன்ற அமைப்புகள் இதனுடன் இணைந்தன.