சேலம்: திமுக அரசின் கடந்த ஓராண்டு ஆட்சியில் எந்த திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை; அரசு ஊழியர்கள் நம்பவைத்து ஏமாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மெய்யனூரில் அதிமுக சார்பில் பெண்களுக்கான இலவச தையற்பயிற்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு தையற் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசின் ஓராண்டு கால ஆட்சியில் மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியும் முறையாக நிறைவேற்றப் படவில்லை என்றும், கொடுத்த வாக்குறுதிகளில் பாதியளவு கூட நிறைவேற்றாமல் இந்த ஆட்சி சாதனை படைத்துவிட்டதாக வாய்ப்பேச்சு பேசுவதாக தெரிவித்தார்.
குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு தேர்தலின்போது நம்பிக்கையான வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற பட்டதாகவும், திமுகவின் வாக்குறுதியை நம்பி அரசு ஊழியர்கள் வாக்களித்ததால் ஆட்சி வந்ததாகவும் தெரிவித்தார்.
இதேபோல பல்வேறு வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்பட வில்லை. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சேலம் - சென்னை எட்டு வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மக்களுக்கான திட்டம். மக்கள் வளர்ச்சிக்கான, நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தை செயல்படுத்த அதிமுக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அதிக அளவு இழப்பீடு வழங்கியது.
ஆனால், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் இன்று வாய் மூடி மௌனம் சாதிப்பதாக தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக இதுபோன்ற திட்டங்களின் தேவையை கருதி தான் அப்போதைய அதிமுக அரசு செயல்படுத்த முன் வந்ததாகவும் தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது மக்களின் தேவை அறிந்து எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்திது. ஆனால், தற்போது திமுக அரசு திட்டங்களை செயல்படுத்துவது போல் அறிவித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.
இதையும் படிக்க | தாம்பரம் - வேளச்சேரி பாலத்தை திறந்துவைத்தார் மு.க. ஸ்டாலின்