மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில், 59வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 24ஆம் தேதி தொடங்கி பத்து நாள்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளதாவது:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் மே 24 ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
அதேபோல் சுற்றுலாத்துறை சார்பில் மே 24 முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது. இதனையொட்டி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், படகு அலங்கார போட்டி, மீன்பிடி போட்டி, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
கோடை விழாவில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.