பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸுக்கு மாற்றுக்கருத்து இல்லை என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமா்வு இன்று இந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் காங்கிரஸுக்கு மாற்றுக்கருத்து இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
'31 ஆண்டு கால சட்டப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது. கருணை அடிப்படையில் அல்லாமல் சட்டபூர்வமாக அவர்கள் விடுதலை பெற வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் காங்கிரஸுக்கு மாற்றுக்கருத்து இல்லை.
சோனியா காந்தியும் ராகுலகாந்தியும் இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பேரறிவாளனை விடுவிப்பதில் தங்கள் குடும்பத்துக்கு ஆட்சேபனை இல்லை என ராகுல் காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு