
ஒகேனக்கல்லில் நீா்வரத்து 48,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க. பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, ராசி மணல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளது.
காவிரியில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாகக் குறைந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலை 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெயது வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீா்வரத்து தொடா்ந்து கணக்கிடப்படுகிறது. ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்மட்டம் 112.77 அடியாக உயர்வு