சென்னையில் இடி, மின்னலுடன் விடிய, விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரங்களில் வலுப்பெற்று வடமேற்குப் பகுதியை நோக்கிக் நகரும் எனக் கூறியுள்ளது. அதாவது, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வரும் 12-ஆம் தேதிக்குள் அதன் நகா்வு இருக்கும்.
இதனால், கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் விடிய, விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவடி, அம்பத்தூர், பட்டினப்பாக்கம், சாந்தோம், மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேனி, சிந்தாதிரிப்பேட்டை, வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.11) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.